குளித்தலை அருகே சிட்டா கேட்டு விண்ணப்பித்த நபரிடம் மீன் வறுவல், குழம்பு வாங்கி வரச்சொன்ன ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், VAO பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவுக்குட்பட்ட தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி, சிட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். சிட்டா தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், விவசாயியை மொபைலில் தொடர்பு கொண்டபோது, அவரது மகன் போனை எடுத்து பேசியுள்ளார்.
அப்போது, இரண்டு மீன் வறுவல், மீன் குழம்பு, வாங்கி வருமாறு VAO கூறியுள்ளார். இதையடுத்து அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா, சிட்டா, பட்டா கேட்டு வருபவர்களிடம் இதுபோன்று பொருட்களை வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்களா என விவசாயி மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், VAO கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து குளித்தலை சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
















