உதிரி பாகங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலை மாறி, 100 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பாகங்களை இந்தியா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், நவீனப் போர் வியூகங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நாட்டின் பாதுகாப்புக்காக சூப்பர் சானிக் ஏவுகணையை உருவாக்க முடிவெடுத்த இந்தியாவின் வெற்றியே பிரம்மோஸ் ஏவுகணை.
ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகள் இருந்தாலும் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக பிரம்மோஸ் ஏவுகணை திகழ்கிறது.
தாழ்வான உயரத்தில் சீறிப் பாய்ந்து இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அமெரிக்கா வைத்துள்ள அதிநவீன ஏவுகணைகளை விட 9 மடங்கு அதிவேகம் கொண்டதாகும்.
உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத சூப்பர் சூப்பர் சானிக் ஏவுகணையான பிரம்மோஸ், இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பிலிப்பைன்ஸ், ஆர்மேனியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் பிரம்மோஸை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
கடந்த 1998-ம் ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM இணைந்து நிறுவிய Brahmos Aerospace கூட்டு நிறுவனமே பிரம்மோஸ் ஏவுகணையைத் தயாரிக்கிறது.
ஆரம்பத்தில் ரஷ்யாவிலிருந்து பூஸ்டர்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் 2018-ல் ரஷ்யாவுடன் தொழில்நுட்பப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 2022-ல் சோலார் இண்டஸ்ட்ரீஸ் மூலம் உள்நாட்டிலேயே இவற்றைத் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. மாதம் ஒரு பூஸ்டர் என்ற நிலையிலிருந்து தற்போது மாதம் சுமார் 60 பூஸ்டர்கள் தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக் கிழமை நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆலையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைக்காக 100-வது உள்நாட்டு பூஸ்டர் வெற்றிகரமாக தயாரிக்கப் பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவர் ஜெய்தீர்த் ஜோஷி மற்றும் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் சத்யநாராயண் நுவால் ஆகியோர் இந்த 100-வது உள்நாட்டு பூஸ்டரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து, போர்முனைப் பகுதியும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான முயற்சியில் இந்த வளர்ச்சி மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
















