ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் ரூபாய் பறித்த புகாரில் பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் புஹாரியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வரும் அகில்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை விசாரித்து வரும் காவல் ஆய்வாளர் புஹாரி, கிருஷ்ணன் என்பவரை குற்றவாளியாக சேர்த்துள்ளதாகவும், அவர் பயன்படுத்திய மொபைல் போன் எண், தனது பெயரில் இருந்ததால் தன்னையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக தன்னை மிரட்டி 40 லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டதாகவும், சமீபத்தில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்வதாக கூறி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் புகாரி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















