சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை பலத்த தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆனந்தபாபு – தனலட்சுமி தம்பதியினருக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து, பிறந்த குழந்தையை சுத்தம் செய்து, உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்காக மருத்துவமனையில் இருந்த ‘வார்மர்’ இயந்திரத்தில் செவிலியர்கள் வைத்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில், குழந்தையின் தலை, முதுகு, கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தையானது எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மருத்துவமனை தரப்பில் கூறுகையில், இந்த விபத்து ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்படவில்லை என்றும், இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நிகழ்ந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















