நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 12ம் தேதி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர், பிஸ்கட் சாப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த செயலை கண்டித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐபி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள், தூதர்கள், வழக்கறிஞர்கள் என, 204 பேர் திறந்த கடிதம் வெளியிட்டுள்ளனர்.
மக்களவைத் தலைவர் தடை விதித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது நெறிமுறைகளை மீறும் அகந்தை மனப்பான்மையை காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இது எம்.பி.,க்களுக்கு ஏற்ற நடத்தையாக இல்லை என்றும், நாடாளுமன்ற படிகள் அரசியல் நாடகம் நடத்தும் இடம் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
தனிப்பட்ட அரசியல் நாடகத்துக்காக ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தின் மாண்பை தாழ்த்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர்.
இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















