நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் காலிப்பணியிடங்கள் நியமனங்களுக்காக 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அமலாக்கத்துறையின் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, அதிமுக எம்பி இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனக்கூறி தலைமை நீதிபதி அமர்வில் அதிமுக எம்பி இன்பதுரை தரப்பில் முறையிடப்பட்டது.
இதனை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது.
















