அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கையாண்டு வரும் போர் யுக்தியை பின்பற்றுவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. அது எந்த விதமான போர் உத்தி? அதன் சிறப்பம்சம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
கடந்த மாத இறுதியில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான போரில், உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா நேரடியாகவே களமிறங்கியது. அசுரத்தனமான ராணுவ வல்லமைகொண்ட அமெரிக்காவின் தாக்குதல்களை ஈரானால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது எனவும், விரைவில் அந்நாடு சரணடைந்துவிடும் எனவும் அப்போது பேசப்பட்டது.
ஆனால், போர் 20 நாட்களை கடந்துவிட்டது. இருப்பினும், ஈரான் பின்வாங்குவதாக தெரியவில்லை. அந்நாடு சற்றும் சளைக்காமல் இரவு பகலாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் போர் உத்தி உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஈரான் எப்படி அமெரிக்காவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறது என்பது முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
உதாரணமாக, தற்போது நடைபெற்று வரும் போரில் ஷாஹெட் (Shahed) என்ற ட்ரோன்களை ஈரான் பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. 20,0000 முதல் 50,000 டாலர்கள் இருந்தால் போதும் இந்த வகை ட்ரோன்களை உருவாக்கிவிட முடியும். ஆனால், இவற்றை சுட்டு வீழ்த்த அமெரிக்கா பயன்படுத்தும் பேட்ரியாட்(Patriot) ஏவுகணைகளை தயாரிக்க குறைந்தது 40 லட்சம் டாலர்கள் தேவை.
எனவே, ஈரானின் மலிவுவிலை ட்ரோன்களை எதிர்கொள்ள அமெரிக்கா பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. ஷாஹெட் ரக ட்ரோன்களை ஒரே நேரத்தில் டஜன் கணக்கில் ஏவ முடியும். அவ்வாறு ஏவும்போது, அதில் எதனை முதலில் தடுப்பது என்பதில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புக்கு குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன், இந்த ட்ரோன்கள் மிக மெதுவாகவும், மிக குறைந்த உயரத்திலும் பறப்பதால் அவற்றை அமெரிக்காவின் ரேடார்களால் எளிதில் கண்டறிய முடிவதில்லை. ஷாஹெட் ட்ரோன்கள் போலவே, குறைந்த செலவிலான பல ஆளில்லா விமானங்களையும், ராணுவ தளவாடங்களையும் ஈரான் கொண்டுள்ளது.
ஈரானின் இந்த போர் உத்தியை பின்பற்றுவது குறித்து இந்தியாவும் தற்போது ஆலோசித்து வருகிறது. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால், குறைந்த பொருட்செலவிலான ட்ரோன்களை கொண்டு அதனை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் அதி திறன்வாய்ந்த ட்ரோன்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெங்களூருவில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகங்களுடன் இணைந்து 900 முதல் 1000 கிமீ வரை செல்லக்கூடிய ட்ரோன்களை உருவாக்கி வருகிறது. 25 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன்படைத்த இந்த ட்ரோன்கள், கூட்டமாக செயல்பட்டு எதிரியின் பாதுகாப்பு அரண்களைத் தகர்க்கும் தன்மைகொண்டுள்ளன.
அதேபோல, ஹைதராபாத்தை மையமாக கொண்ட விஇஎம் டெக்னாலஜிஸ் நிறுவனம், சேஸர்(Chaser) எனப்படும் வட்டமிடும் ட்ரோன்களை உருவாக்கி வருகிறது. இவை எடை குறைந்தவையாகவும், காற்றை கிழித்து செல்லும் ஏரோடைனமிக் அமைப்பையும் கொண்டுள்ளன. எனவே, இந்த வகை ட்ரோன்கள் “தற்கொலைப்படை ட்ரோன்கள்” என அழைக்கப்படுகிறன்றன.
நொய்டாவில் உள்ள IG Drones நிறுவனம், 1,000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய டெல்டா விங் (Delta-wing) ரக ட்ரோன்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இவற்றால் 3 முதல் 5 மணி நேரம் வரை பயணித்து எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.
இதுபோன்று பல்வேறு நிறுவனங்கள் செலவு குறைந்த மற்றும் அதிக திறன் கொண்ட ட்ரோன்களை உருவாக்கி இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்த்து வருகின்றன. பெரிய ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவதை காட்டிலும், இத்தகைய ட்ரோன்களை பயன்படுத்துவதால், இந்தியாவிற்கு பெரும் தொகை மிச்சமாகும்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அதிநவீன ட்ரோன்கள் இந்திய ராணுவத்திற்கு பெருமளவில் கைகொடுத்தன. அதன் விளைவாக ட்ரோன்கள் உற்பத்தியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த தொடங்கியது. உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களை பெருமளவில் ஊக்குவித்து வருகிறது.
இந்த சூழலில், ஈரானின் போர் உத்தி ட்ரோன்களின் முக்கியத்துவத்தை மேலும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. எனவே, வரும் நாட்களில் மத்திய அரசு ட்ரோன்கள் உற்பத்திக்கும், அது தொடர்பான ஆய்வுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
















