நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி கே.மணிவண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இட ஒதுக்கீடு கோரி கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் அனுப்பிய மனுக்களுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தது.
மேலும், சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.
















