கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே 20 நாட்களாக போர் நீடித்த வருகிறது. ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்களான அயதுல்லா அலி கமேனி, அலி லாரிஜானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
ஈரானின் எண்ணெய் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிவாயு தடுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நாட்டின் இறையாண்மை மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கத்தார் அரசு கொந்தளித்துள்ளது. LNG ஆலையை ஈரான் தாக்கியதால் கத்தாரில் உள்ள தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கத்தாருக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் குரல் கொடுத்துள்ளதால், 3ஆம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரானின் எரிவாயு ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது எனவும் கூறியுள்ளார். ஈரான் தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் எடுத்த தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தவறான முடிவு என்றும், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் முழு பார்ஸ் மாகாணமும் வெடிக்கச் செய்யப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















