விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 10-ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப் படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் நள்ளிரவில் திடீரென அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
















