நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை, ராணுவத்தினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடியப் போராடி பத்திரமாக மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன் என்ற இளைஞர், கூடலூர் அருகே உள்ள ‘ஊசிமலை காட்சிமுனை’ சுற்றுலா மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அழகிய பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சுமார் 150 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் விழுந்தார்.
சுற்றுலா தலம் மூடும் நேரமாகியும் சிவகுருநாதன் வெளியே வராததால் சந்தேகமடைந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அடர்ந்த காடு என்பதாலும், இரவு நேரத்தில் யானை, புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்ததாலும் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில், நவீன உபகரணங்களுடன் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் களமிறங்கினர். இதனையடுத்து, விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் அதிகாலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை உயிருடன் மீட்டனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞரை அனுமதித்தனர்.
















