ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளாகும் நிலையில், அதன் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே இதற்கான அறிவிப்வை வெளியிட்டார்.
அதன்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில், இனி மாநிலங்கள் இருக்காது என்றும் அதற்கு பதிலாக, ஒட்டுமொத்த நாடும், 80 கோட்டங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முதல் ஆறு கோட்டங்கள், பிரதேசம் என்று அழைக்கப்படுவதாகவும், ஏற்கனவே உள்ள விபாக், ஷேத்ரம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களின்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில், தமிழகம் ஆறு கோட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. மாநில தலைவர், மாநிலச் செயலர், மாநில அமைப்பாளர் போன்ற பொறுப்புகள், கோட்டத் தலைவர், செயலர், அமைப்பாளர் என்று மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















