புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தித்து வருவதாக, காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு முடிவடைந்த போதிலும், புதுச்சேரியில் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரியில் கூட்டணிக்கு தாங்கள் தான் தலைமை என காங்கிரஸ் கூறி வருவதால் முடிவு எட்டப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்மண்ணாடிப்பட்டு,நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்பதால் குழப்பம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கடந்த காலங்களில் உள்ள தரவுகள்படி, புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதியிலும், திமுக 9 தொகுதியிலும் போட்டியிடுவது வழக்கம் என்று தெரிவித்தார்.
ஆனால், இம்முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தித்து வருவதாக கூறினார். தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை என்பது எப்போதும் கடைபிடிக்கப்படும் மரபு என்றும், கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
















