பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சுமார் 19 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 34 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூரில், தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தனியார் நிறுவன வேனில், 24 பெட்டிகளில் நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
13 கிலோ தங்கம் மற்றும் 34 கிலோ வெள்ளி நகைகள் இருந்துள்ளன. இந்த நகைகள் பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என்பதும், பல்லாவரத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 7 நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, பல்லாவரம் சட்டமன்ற தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டபோது,
வேனில் அதிக தொகை மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது என்பதால், பின்னர் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
















