தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களுக்கு வாக்குப்பதிவுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேர்தலில் வாக்குப்பதிவு சதவிதத்தை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
















