அதிமுக ஆட்சி அமைந்ததும் இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதில், வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை என்றும், மகளிர் நலன் காக்க குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மகளிரைப் போல, நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், “அம்மா இல்லம் திட்டம்” மூலம், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டு மனையும், சொந்த வீடும், இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு 25ஆயிரம் ரூபாய் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
















