மயிலாடுதுறையில் கடந்த 22 ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 22-ஆம் தேதி இரவு மூங்கில்தோட்டம் கடைவீதியில் சரத்குமார் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்குமார் நேற்று உயிரிழந்தார்.
விபத்து ஏற்பட்டு 4 நாள்கள் ஆன நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யாததை கண்டித்தும், சரத்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மயிலாடுதுறை-தரங்கம்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
















