அரியலூரில் சினிமா பட பாணியில் காதல் மனைவி அவரது உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி நடுரோட்டில் கணவன் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிஷா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் மீறி கடந்த 18-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, குன்னம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினர். இருவருமே மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழ காவல்துறை அனுமதி அளித்து அனுப்பி வைத்ததனர்..
இந்நிலையில் அரியலூரில் முத்துவின் உறவினரின் வீட்டு விருந்து கலந்து கொண்ட பின் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் தம்பதியினர் நின்றிருந்தனர். அப்போது காரில் வந்த ஸ்ரீநிஷாவின் உறவினர்கள் இருவரையும் பிரித்து ஸ்ரீநிஷாவை வலுகட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்து காரின் கதவைப் பிடித்தபடி தொங்கியவாறே தனது மனைவியைக் காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதினர் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீநிஷாவை மீட்டனர். மேலும் காரை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீநிஷாவின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
















