மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து இத்தாலி தலைநகர் ரோம் நகரில் அமைதிப் பேரணி நடத்தினர்.
இஸ்ரேல் – காசா போரால் இரு நாடுகளிலும் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.
ஏராளமான குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இரு நாட்டுகளின் தாய்மார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனவும் சர்வதேசச் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து இத்தாலி தலைநகர் ரோம் நகரில் அமைதிப் பேரணி நடத்தினர்.
மோதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை உலகிற்கு உணர்த்தும் வகையில், இந்தத் தாய்மார்கள் ரோம் நகரின் வீதிகளில் வெறுங்காலுடன் நடந்து சென்றது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தங்களது அரசியல் மற்றும் எல்லைப் பாகுபாடுகளைக் கடந்து, தங்கள் குழந்தைகள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.
யுத்தக் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு தாயின் வலி ஒன்றுதான் என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்த மனிதாபிமானப் பேரணி அமைந்தது.
















