மேற்காசிய மோதலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மேற்காசிய மோதலை அரசியலாக்க வேண்டாம் என்றும், அதுகுறித்த வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு, உலகம் ஒரு புதிய தொடக்கத்துடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், உலகின் பல்வேறு பிராந்தியங்களில் போர் மற்றும் மோதல் போக்கு உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நமது அண்டைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடுமையான போர் நடைபெற்று வருவதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உலகம் முழுவதும் ஒரு நெருக்கடி உருவாகி உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் நாம் கட்டமைத்துள்ள வலிமைகளால் இந்த சவால்களை உறுதியுடன் எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சவாலை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, சுயநல அரசியலுக்கு இங்கு எவ்வித இடமும் இல்லை என எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.
















