ஈரானின் (Isfahan) இஸ்பஹானில் உள்ள மிகப்பெரிய ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1000 கிலோ எடையுள்ள பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இன்னும் சில நாட்களில் ஈரான் அணுஆயுதத்தைத் தயாரித்து விடும் என்று சொல்லி கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அந்நாட்டின் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியது.
30 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்துவரும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அந்நாட்டின் கார்க் தீவு உட்பட மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிசக்தித் தளங்கள் முற்றிலுமாக தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கூடுதலாக உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்தைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்கவில்லை என்றாலும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே செறிவூட்டபட்ட யூரேனியத்தை ஈரான் சேமித்து வைத்திருக்கும் அந்நாட்டின் மிகப்பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கியுள்ளன.
தலைநகர் தெஹ்ரானுக்குத் தெற்கே மேற்கு ஈரானில், ஸயந்தே நதியின் வடக்குக் கரையில் Isfahan இஸ்பஹான் அமைந்துள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரில் 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு வாங்கப்பட்ட, அமெரிக்காவின் F-14 டாம்கேட்ஸ் விமானங்களைக் கொண்டுள்ள நாட்டின் மிகப் பழமையான பத்ர் ராணுவ விமானத்தளமும் உள்ளது.
ஈரானின் முதன்மையான அணுசக்தி திட்டத்தின் முக்கிய தளமாக இஸ்பஹான் விளங்குகிறது. இஸ்பஹானில் நிலத்தடியில் நடன்ஸ் செறிவூட்டல் தளம் உள்ளிட்ட பல அணு ஆராய்ச்சி மையங்களும் ஆயுத சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன.
1999-ல் கட்டப்பட்ட இஸ்பஹான் அணு தொழில்நுட்ப மையத்தில் சீனாவால் வழங்கப்பட்ட மூன்று சிறிய ஆராய்ச்சி அணு உலைகள் இயங்கி வருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கான எரிபொருள் உற்பத்தி நிலையமும் இஸ்பஹானில் உள்ளன. ஆயிரக்கணக்கான அணு விஞ்ஞானிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக நம்பப்படும் இஸ்பஹானில் 10 மெகாவாட் திறன் கொண்ட நான்காவது அணு ஆராய்ச்சி உலையை கட்டிவருவதாக கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஈரான் அறிவித்தது.
அணுசக்தி சோதனைகள், தொழில்துறை கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் கதிரியக்க மருந்துகள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.
இதுமட்டுமின்றி இஸ்பஹானில் ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானப் பராமரிப்பு மற்றும் உற்பத்தி, ராணுவ தளவாடங்களின் தயாரிப்பு மையங்கள் என ஈரானின் பாதுகாப்புத் துறைக்கு மிக முக்கியமான மாகாணமாக இஸ்பஹான் விளங்கி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இஸ்பஹான் அணுசக்தி மையத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதைக்குள் 18 நீல நிற கொள்கலன்கள் ஏற்றப்பட்ட ஒரு லாரி செல்வதை Airbus Defence and Space Pleiades Neo)ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் ப்ளீயாட்ஸ் நியோ செயற்கைக்கோள் படங்கள் காட்டின. அணுசக்தி நிலையத்துக்கு அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை லாரியில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த லாரியில் 60 சதவீதம் வரை தூய்மை செறிவூட்டப்பட்ட, 534 கிலோ வரையிலான யுரேனியம் அடங்கிய 18 பாதுகாக்கப்பட்ட கொள்கலன்கள் கொண்டு செல்லப்பட்டதாக அணு விஞ்ஞானிகள் செய்தி இதழின் ஆய்வாளர் ஃபிரான்சுவா தியாஸ்-மௌரின் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாட்கள் போரில் ஈரானின் Isfahan இஸ்பஹான் மீதும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி Isfahan இஸ்பஹானில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதால் இப்போது மீண்டும் 1000 கிலோ எடையுள்ள பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் போரின் 32-வது நாளில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தொடர் தாக்குதல்களைத் நடத்திவரும் நிலையில் மேலும் ஆபத்தான கட்டத்தைப் போர் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
















