புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.15 மணிக்கு, புதுச்சேரி விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து அண்ணா சாலை வரை, சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
இதனால் சாலையோரம் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் வரும் லாஸ்பேட்டை விமான நிலையம் தொடங்கி, ரோடு ஷோ நடக்கும் பகுதி வரை, தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை காரணமாக கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை, பிரெஞ்சு பகுதியான ஒயிட் டவுன் உள்ளிட்ட இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
















