தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்த ஊழியர்களை திமுக ஒன்றியச் செயலாளரே மிரட்டி, பெயிண்ட் டப்பாவை காலால் உதைத்து தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சமீபத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து திமுகவில் இணைந்த மனோஜ்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதலியார்பட்டி பகுதியில் திமுக ஊழியர்கள் சுவர்களில் ‘உதயசூரியன்’ சின்னம் மற்றும் வேட்பாளர் பெயரை வரைந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கடையம் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வேட்பாளர் மனோஜ்பாண்டியனுக்கு ஆதரவாக சுவர்களில் விளம்பரம் வரைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, அங்கிருந்த பெயிண்ட் டப்பாவைக் காலால் எட்டி உதைத்து ஊழியர்களை மிரட்டி விரட்டியடித்தார்.
















