6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நோக்கங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தை பற்றி புகார் கூறுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பழக்கமாகிவிட்டது என விமர்சித்துள்ளார்.
2026-27ஆம் கல்வியாண்டு முதல் இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் மும்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதாகவும்,
மூன்று மொழிகளில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும், பிற பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை,
6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்தாண்டு தாய்மொழி அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ முக்கியத்துவம் அளித்தது எனக்கூறியுள்ள அண்ணாமலை,
சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் முதலமைச்சரின் மகளின் பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சரின் தவறான வாதங்கள் ஆய்வுக்கு கூட தாக்குப்பிடிக்காது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
















