மேற்குவங்கத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கு அதிகமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கொல்கத்தாவில் தனது ஆதிக்கத்தைத் திரிணாமுல் கட்சி தக்கவைத்துக்கொண்டது.
கொல்கத்தா தெற்கில் 1.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கொல்கத்தா வடக்கில் 1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொல்கத்தாவில் உள்ள 14 தொகுதிகளிலும் திரிணாமுல் கட்சி அமோக வெற்றி பெற்றது.
கொல்கத்தா தெற்கில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக-வை விட 3.46 லட்சம் வாக்குகள் அதிகமாகவும், கொல்கத்தா வடக்கில் உள்ள ஏழு தொகுதிகளிலும் 2.62 லட்சம் வாக்குகள் அதிகமாகவும் திரிணாமுல் கட்சி பெற்றிருந்தது.
இந்த 14 தொகுதிகளில் வெற்றிபெற்றவர்களில் ஏழு பேர் மம்தா தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
மீண்டும், 2024 மக்களவைத் தேர்தலிலும் கொல்கத்தா தெற்கில் 1.87 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் கொல்கத்தா வடக்கில் 92,560 வாக்கு வித்தியாசத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்கள்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கொல்கத்தா, திரிணாமுல் காங்கிரசிடமிருந்து பாஜக வசம் சேரும் என்று எதிர்பார்ககப்படுகிறது.
294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது.
பலத்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் 63.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப் பட்ட பின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 கோடியில் இருந்து 7.04 கோடியாக குறைந்தள்ளது.
குறிப்பாக கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு ஆகிய தொகுதிகளில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா தெற்குத் தொகுதியில்தான், மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடும் பபானிபூர் தொகுதி உட்பட கஸ்பா, பெஹாலா பூர்வா, பெஹாலா பஸ்சிம், கொல்கத்தா துறைமுகம், ராஷ்பிகாரி மற்றும் பாலிகஞ்ச் ஆகிய முக்கியமான தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. கொல்கத்தா வடக்குத் தொகுதியில் காசிப்பூர்-பெல்காச்சியா, மாணிக்தலா, ஷியம்புகூர், ஜோராசங்கோ, பெலேகாட்டா, என்டலி மற்றும் சௌரங்கி ஆகிய முக்கியமான ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 6 லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றிபெற்ற பவானிபூர் தொகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 2021 நடந்த இடைத்தேர்தலில் வெறும் 50000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் மம்தா பானர்ஜி வெற்றிபெற்று முதல்வரானார் என்பது குறிப்பிடத் தக்கது.
2024 தேர்தல்களில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 144 வார்டுகளில் 40-க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றியது. முதல்வர் தொகுதியான பவானிபூர் தொகுதியில் உள்ள எட்டு வார்டுகளில், ஐந்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் பாஜக வசம் வந்தது.
இந்நிலையில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியால் வரும் தேர்தலில் கொல்கத்தாவில் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பவானிப்பூரில் முதல்வர் மம்தாவின் வெற்றியே கேள்விக்குறியாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
















