உத்தரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனால், கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது.
நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளதால் உத்தரகண்ட் மாநிலம் கடவுளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இத்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது தீராத ஆவல்.
குறிப்பாக, 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக அமைந்த கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட கோடை காலங்களில்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் கேதார்நாத் யாத்திரை தொடங்கியது. பக்தர்களும் ஆர்வமுடன் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கௌரிகண்ட் என்கிற பகுதியில் மலைப்பாதையில் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதி பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மலைப்பாதை மிகவும் சேதமடைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், “கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், கடை வைத்திருந்த 19 பேரைப் காணவில்லை. காணாமல் போனவர்களை மாநிலப் பேரிடர் மீட்புப்படை குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் தேடி வருகின்றனர்.
மேலும், காணாமல் போனவர்கள் அனைவருமே அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரகண்ட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.