சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சூளைமேடு அப்துல்லா சாலையில் ஓசியனிக் எடிபிள் இன்டர்நேஷனல் என்கிற தனியார் நிறுனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், கடல் உணவுகள் மற்றும் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜோசப்ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப், ஜேம்ஸ் வால்டர், டோமினிக் சேவியர் ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்நிறுவனம் திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் சொந்தமாக காய்கறி, பழப் பண்ணை வைத்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ.,, ஐ.ஓ.பி. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 225 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்நிறுவனம் கடன் பெற்ற தொகையை மத்திய அரசு அனுமதி இன்றி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சூளைமேடு தலைமை அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான மேற்கு தாம்பரம், வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அமைந்தகரை, தியாகராய நகர், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே, இந்நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல வங்கிகளில் 104 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அந்தப் பணத்தையும் இதேபோல முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐ.ஓ.பி. வங்கி சார்பில் சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, இந்நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வங்கியில் கடன் வாங்கிய ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.