பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதும், அவர்களை நமது இராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை இந்திய எல்லைக்குள் கடத்தி வருவதும், அவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி முறியடிப்பதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை நேரத்தில் இந்திய இராணுவத்தினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமான தெகலான் அருகே, விலும் என்கிற இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்தார். திடீரென அவர், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார்.
இதையடுத்து, இந்திய இராணுவத்தினர் அவரை எச்சரித்தனர். எனினும், எச்சரிக்கையையும் மீறி அவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார். எனவே, அவரை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், குண்டு பாய்ந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஏற்கெனவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கடத்தலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தானியர்கள் விரட்டியடிக்கப்பட்டதும், அப்போது சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.