செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, தி.மு.க.வின் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி, இருவரின் வீடு மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனடிப்படையில், மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், அசோக் குமார் வீட்டில் இல்லாததால் அவரை கைது செய்ய இயலவில்லை. இதன் பிறகு, செந்தில் பாலாஜி விவகாரத்தில் மருத்துவமனை, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல சம்பவங்கள் அரங்கேறியது. இறுதியாக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
எனினும், விடாத அமலாக்கத்துறை நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, செந்தில் பாலாஜியை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்தது. பின்னர், 5 நாட்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தது. இந்த விசாரணை கடந்த 12-ம் தேதி நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 25-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு, அவரது தம்பி அசோக் குமார் இராம் நகரில் புதிதாக கட்டிவரும் பங்களாவில் சோதனை நடத்தியது. அப்போது, அசோக் குமார் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகும்படி, அந்த வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அதேபோல, சார் பதிவாளருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டது.
இதனிடையே, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்ததாகவும், அவரிடம் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த பல்வேறு நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையால் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக தவறான தகவல் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால், உண்மையில் அசோக் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படவும் இல்லை, தடுப்புப் காவலிலும் வைக்கப்படவில்லை.
அதேசமயம், அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அற்பக் காரணங்களைக் கூறி அவர் ஆஜராகவில்லை. அதேபோல, அவரது மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர்களும் ஆஜராகவில்லை. சொத்துக் குவித்ததிலும், குற்றங்களில் ஈடுபட்டதிலும் மூவரும் முக்கியப் பங்கு வகித்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.