பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.662 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருப்பதாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூடுதலாக 200 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவிதிருப்பதாகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இடைவிடாதப் பருவமழையாலும், திடீர் மேக வெடிப்புகளாலும் பேய்மழை கொட்டியதாலும், பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், மாநிலம் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கிறது.
இதையடுத்து, இமாச்சலப் பிரதேச அரசு முழு மாநிலத்தையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில அரசின் சமீபத்திய தகவல்களின்படி, ஜூன் 24 முதல் தற்போதுவரை இமாச்சலின் மொத்த பண இழப்பு 8014.61 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தாண்டுப் பருவமழைக் காலத்தில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. பெருவெள்ளத்தினாலும் , நிலச்சரிவுகளாலும் மொத்தம் 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், மழை வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களில் இதுவரை 117 பேரும், பருவமழை சீற்றத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சம்மர் ஹில் நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களின் சடலங்களை மீட்பதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், இமாச்சல் மழை வெள்ளம் தொடர்பாக கடந்த 19-ம் தேதி முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேற்று இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து, மாநில நிர்வாகத்துடன் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இமாச்சலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தனர். இந்த சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அனுராக் தாக்கூர், “இமாச்சலப் பிரதேச அரசுக்கு மொத்தம் ரூ.662 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தவிர, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்குக் கூடுதலாக ரூ.200 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என்றார்.