ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 24-ம் தேதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். மாலை சுமார் 5.30 மணியளவில் ஜோகன்னஸ்பர்க் நகரை பிரதமர் சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு தென்னாப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டின் துணை அதிபர் பால் ஷிபகோஸா வரவேற்றார். அதேபோல, தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்” என்று கோஷமிட்டபடியே பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அந்நாட்டு ஆண்களும் பெண்களும் அடங்கிய நடனக் குழுவினர், பாரம்பரிய உடையடைந்தபடி பிரதமர் மோடியை நடனமாடி வரவேற்றனர்.
பின்னர், “பிரிக்ஸ்” வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகவே, இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். அதேபோல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இங்குள்ள தெருவோரக் கடைகளில்கூட யு.பி.ஐ. வசதி இருக்கிறது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தெற்காசிய நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும், சூரிய ஆற்றல், காற்றாலை, மின்சார வாகனம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மையமாகவும் இந்திய மாறி வருகிறது” என்று குறிப்பிட்டார்.