“பிரிக்ஸ்” அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து “பிரிக்ஸ்” கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இக்கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 22-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் “பிரிக்ஸ்” கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் ரஷ்ய அதிபர் புடினை தவிர, இதர நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் மோடி, “ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இந்திய மக்களுக்கும் இந்த வரலாற்றுக்கும் மிகவும் ஆழமானத் தொடர்பை கொண்டிருக்கிறது. இங்கிருந்து சற்று தொலைவிலுல்ள டால்ஸ்டாய் பண்ணை 110 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் கட்டப்பட்டது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் மகத்தான கருத்துக்களை ஒன்றிணைத்தின் மூலம், மகாத்மா காந்தி நமது ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பின் மிக நீண்ட பயணத்தில் நாங்கள் மகத்தான புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறோம். எங்களது புதிய வளர்ச்சி வங்கி, உலகளாவிய தென்பகுதி நாடுகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிரிக்ஸ் செயற்கைக்கோள் அமைப்பு, தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், மருத்து தயாரிப்புகளுக்கு பரஸ்பர அங்கீகாரம் போன்றவை மூலம் பிரிக்ஸ் நாடுகளில் வசிக்கும் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வருகிறோம்.
மேலும், இளைஞர்கள் மாநாடு, விளையாட்டுப் போட்டிகள், சிந்தனைக் குழுக்கள் போன்றவை மூலம் அனைத்து நாடுகள் மற்றும் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தி வருகிறோம். நமது நெருக்கமான ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்த சில பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, விண்வெளித்துறையில் ஒத்துழைப்பு. பிரிக்ஸ் செயற்கைக்கோள் விண்கலத்தில் நாங்கள் ஏற்கெனவே பணியாற்றி வந்தாலும், இதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று பிரிக்ஸ் விண்வெளி ஆய்வுக் கூடத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
இரண்டாவதாக, கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு. அதாவது, பிரிக்ஸ் அமைப்பை எதிர்காலத்துக்கு தயாராகும் அமைப்பாக மாற்றி, நமது சமூகங்களை தயார்படுத்த வேண்டும். இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக அறிவு பகிர்வுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். மேலும், மாணவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க, நாடு முழுவதும் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை உருவாக்கி இருக்கிறோம். அதேபோல, மொழித் தடைகளை நீக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழித் தளமான பாஷினி பயன்படுத்தப்படுகிறது.
மேலும், தடுப்பூசி போட கோவின் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பலமே பன்முகத்தன்மைதான். எந்தப் பிரச்னைக்கும் இந்த பன்முகத்தன்மையின் சோதனையில் இருந்துதான் தீர்வு கிடைக்கிறது. இத்தீர்வுகளை உலகின் எந்த மூலையிலும் எளிதாக செயல்படுத்த முடியும். ஆகவே, இந்தியாவில் உருவாக்கப்பட்ட இத்தளங்கள் அனைத்தையும் பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மூன்றாவதாக, நமது திறன்களை அடையாளம் காண நாம் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டும்.இதன் மூலம் நமது வளர்ச்சிப் பயணத்தில் ஒருவருக்கொருவர் துணைபுரிய முடியும். நான்காவதாக, பிரிக்ஸ் அமைப்பின் 5 நாடுகளிலும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஏராளமான புலிகள் காணப்படுகின்றன. ஆகவே, சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் கீழ், புலிகளின் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். ஐந்தாவதாக, நமது நாடுகளில் பாரம்பரியமான மருத்துவத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் இருக்கின்றன. இதன் மூலம், நாம் ஒருங்கிணைந்து பாரம்பரிய மருத்துவ களஞ்சியத்தை உருவாக்க முடியுமா என்று கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “பிரிக்ஸ் அமைப்பில் உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது காலத்தின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தற்போதைய தேவையும்கூட. அதேபோல, இந்தியா தலைமையிலான ஜி20-ல் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் இணைந்து முன்னேறுவதே எங்கள் முயற்சி. இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற “வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத்” உச்சிமாநாட்டில் 125 நாடுகள் பங்கேற்று, தங்கள் கவலைகளையும் முன்னுரிமைகளையும் பகிர்ந்து கொண்டன.
ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பு உரிமை வழங்கவும் முன்மொழிந்திருக்கிறோம். மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. இதில் ஒருமித்த கருத்துடன் முன்னேறுவதை வரவேற்கிறோம். 2016-ல் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றபோது, இவ்வமைப்பை ஒரு பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் ஒருமித்த தீர்வுகளை உருவாக்குவதாக வரையறுத்தோம். தற்போதைய பிரிக்ஸ், தடைகளை உடைத்தல், பொருளாதாரங்களுக்கு புத்துயிர் அளித்தல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்று கூறலாம். இப்புதிய வரையறையை அனைத்து பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து, அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் நாம் தொடர்ந்து தீவிரமாக பங்களிப்போம்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.