சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்குவதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இஸ்ரோ, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அதே நேரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் உருவாக்கி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
இதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரல் வைத்திருக்கும் நிலையில், அடுத்த அதிரடியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவ தயாராகி விட்டது இஸ்ரோ.
செப்டம்பர் மாதம் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்காக ஆதித்யா எல்-1 தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரோ, புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அப்புகைப்படத்தில் ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், தயார் நிலையில் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், ஆதித்யா எல்-1 மிஷன் தொடர்பான உட்புற ஒத்திகைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.
செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1, 4 மாதங்கள் சுமார் 15 லட்சம் கி.மீ. பயணத்திற்குப் பிறகு, சூரியன் – பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1ஐ சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே, சூரியனின் செயல்பாடுகள், விண்வெளி வானிலையில் ஏற்படும் தாக்கம், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யும்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் ஆதித்யா எல்-1 மீதான எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்கிறது.