சிங்கப்பூருடனான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.
சட்ட விரோத ஏற்றுமதியைத் தடுக்கவும், உள்நாட்டு விலையை சரிபார்ப்பதற்கும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய அரசு கடந்த ஜூலை 20-ம் தேதி தடை விதித்தது. இதில், ஒரு சில வகைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நடப்பு ஆண்டில் அரிசி ஏற்றுமதி அதிகமாக இருப்பதை மத்திய அரசு கவனித்து வருகிறது. மேலும், ஏற்றுமதியை குறைக்கும் வகையில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் 20 சதவிகிதம் வரியையும் மத்திய அரசு விதித்தது.
இந்த நிலையில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்படுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவும் சிங்கப்பூரும் மிக நெருக்கமான மூலோபாய கூட்டாண்மையில் உள்ளது. பொருளாதார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்பைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அரிசி ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கத் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முறையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்