அகில இந்திய அளவில் பாஜக மிகவும் வலிமையாக உள்ள நிலையில், தமிழகத்திலும் பாஜகவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில், பாஜகவை எழுச்சி பெறவைக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற முதற்கட்ட யாத்திரையை நிறைவு செய்தார். 2-ம் கட்ட யாத்திரையை தென்காசியில் வரும் 4-ம் தேதி தொடங்க உள்ளார்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பாஜகவைச் சேர்ந்த 28 பிரிவு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு அணி நிர்வாகிகளும், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையை எடுத்துச் சொல்லுதல் மற்றும் சுற்றுச்சூழல் அணியினர் தூய்மைப் பணியில் ஈடுபடலாம் என்றும், மருத்துவ அணி சார்பில், இரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
குறிப்பாக, ஒவ்வொரு அணியினரும், மாதம் ஆயிரம் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன் மற்றும் வி.பி. துரைசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் பாஜகவின் 7 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று, பாஜகவில் உள்ள 28 பிரிவுகளில் உள்ள நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.