இலங்கையில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்திடம் போராடி வெற்றிபெற்றிருக்கிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி 10 விக்கெட்டுகளுக்கு 164 ரன் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. 2-வது போட்டியில் இலங்கையின் கண்டி நகரில் நடந்தது.
இப்போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச வீரர் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ தனி ஒருவராகப் போராடி 89 ரன்கள் சேர்த்தார். ஆட்ட முடிவில் வங்கதேச அணி 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
165 ரன்கள் என்கிற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, வங்கதேச பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. இலங்கை அணி ஆரம்பத்திலேயே முதல் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர், சரித் அசலன்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 62, கேப்டன் தசுன் ஷானகா 1 பவுண்டரி உள்பட 14 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வித்திட்டனர்.
இறுதியில் கடுமையாகப் போராடி 39 ஓவர்களில் 165 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
போட்டியின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டம் ஏதுமில்லாத நிலையில், அடுத்ததாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை (செப். 2) மோதுகின்றன