கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இதுகுறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் வந்தது. இதையடுத்து, அம்மாநில நிர்வாகிகள், ஜி.எம்.மிர், டாக்டர் அலி முகமது மிர், அல்தாப் தாக்கூர், ஆசிப் மசூதி, ஆரிப் ராஜா, அன்வர் கான், மன்சூர் பட் மற்றும் பிலால் பார்ரே ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு முறைக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
அந்த நோட்டீஸில், “ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. துணைத் தலைவர் சோபி யூசுப் மீது ஒழுக்காற்றுக் குழு விசாரணை நடத்தியபோது, இந்த விவகாரம் ஒழுங்குமுறைக் குழுவின் கவனத்திற்கு வந்தது. கட்சியில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளும், ஒழுக்கமின்மைக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.
கட்சியில் உங்களது பதவி மற்றும் உங்களின் கடந்தகால பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் பாதகமான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒழுக்காற்றுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்தும், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவீர்கள்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இன்று முதல் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவருக்கு விளக்கத்தை அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே அனுப்பப்பட்டு வருவதாகவும், தனித்தனியாக அறிவிப்பு செய்யப்பட இயலாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக சுனில் சேத்தியும், குழுவின் உறுப்பினர்களாக அசீம் குப்தா மற்றும் ரேகா மகாஜனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.