காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆயிரம் விளக்குத் தொகுதியான நுங்கம்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழங்கினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 1-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மை இயக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பா.ஜ.க. தலைவர்கள் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர். அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் தூய்மை இயக்கத்தில் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதியான இன்று காலை 9 மணி அளவில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில், தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே.விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். ஆயிரம் விளக்கு தொகுதியான தெற்கு மண்டல் 110-வது வட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் ராமலிங்கம் கோவில் அருகில் ராஜாஜி வீதியில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, அடையாரில் உள்ள காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.