சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.வினர் பீதியில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இவற்றில் 3 வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இது தி.மு.க.வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.க. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பையா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன் இவர்கள் மீதான வழக்குகளின் பிடி தளர்ந்து வருகிறது. மேலும், சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறார். இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, தமிழக தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் சி.பி.ஐ. வசம் சென்றால், வழக்குகள் நேர்மையாக நடக்கும். இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, சம்பந்தப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் மட்டுமல்லாது அறிவாலய வட்டாரமும் கலக்கத்தில் இருக்கிறது.