நீலகிரி அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லுாரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத், தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேருடன் கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து, இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பன்சத்திரம் என்கிற இடத்தில் வந்தபோது, கடும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த இராணுவத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அங்கு நினைவுச்சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து வெலிங்டன் இராணுவப் பயிற்சி மைய அதிகாரிகள் கூறுகையில், “இந்திய முப்படைகளின் இராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்து விட்டனர்.
அந்த விபத்து நேரிட்டபோது, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மீட்புப் பணியில் இராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே, அந்த கிராமத்தை இராணுவம் தத்தெடுத்து நிவாரணப் பொருட்கள் வழங்கியது. மேலும், அக்கிராமத்தில் ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த இராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில், நஞ்சப்பன்சத்திரத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அப்பகுதியில் இராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன் எடையில் பளிங்குக் கற்களாலான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவுச் சின்னத்தில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த நினைவுச் சின்னம் வரும் டிசம்பர் 8-ம் தேதி திறந்து வைக்கப்படும்” என்று கூறினர்.