ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது. இவ்விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தில், இரயில் பாதையின் மேல் இருக்கும் கேபிளில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்யும் பணியில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக, விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் இரயில், கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதே வழித்தடத்தில் பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த இந்த இரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் இரயில் மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் 3 இரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதையடுத்து, இரயில்வே ஊழியர்களும், காவல்துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பயணிகள் உயிரிழந்து விட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 40 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்த சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. இவ்விபத்தில் இரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் இரயில்வே காவலர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது.
இந்த இரயில் விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று இந்தியன் இரயில்வே தெரிவித்திருக்கிறது. அதேசமயம், முதல்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் இரயில் சிக்னலை மீறிச் சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் பிறகே கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றும் இரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரயில் விபத்து குறித்து இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நிலைமை குறித்து ஆய்வு செய்தார். ஆந்திரப் பிரதேச முதல்வரிடம் விபத்து குறித்துப் பேசினேன். மாநில அரசு மற்றும் இரயில்வே குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும். பிற மாநிலப் பயணிகளைப் பொறுத்தவரை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.