நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியைக் கேட்டு பட்டியலின சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதிக்குப் பட்டியலின சிறுவர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அவர்களைச் சுற்றி வளைத்து மிரட்டியுள்ளது 6 பேர் கொண்ட கும்பல். அந்த கும்பலிலிருந்தவர்கள், பட்டியலின இளைஞர்களிடம் நீங்கள் என்னடா சாதி எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஒரு கட்டத்தில், அவர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா போதையிலிருந்த அந்த கும்பல் இளைஞர்களிடம் இருந்து பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கவுன்சிலிங் உட்பட, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கி முறையான பாதுகாப்பும் தர வேண்டும் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உட்பட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக ஆட்சி பதவியேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.