கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையைக் கூடுதலாகக் கவனித்து வந்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் உள்ளது.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சுமார் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது. பின்னர் அவர் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக அமைச்சர் பொன்முடி இன்று காலை நேரில் ஆஜரானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் நேரில் ஆஜராகி உள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையில் இன்று விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடி, விசாரணை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், விசாரணை முடிவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லியில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.