உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.
உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
உத்தரகாண்டில் இருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய அவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து உற்சாகப்படுத்தினார். மேலும் தொழிலாளர்களுக்கு சால்வை மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “மத்திய மற்றும் உத்தரகண்ட் மாநில அரசுகளின் அயராத முயற்சியின் விளைவாக, தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு உத்தரப்பிரதேச மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றி என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.