பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
5 மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இம்மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
அதேசமயம், தெலங்கானா மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்திருக்கிறது. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் பிரதமர் மோடிக்கு தங்களது ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும்.
குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதேபோல, ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதோடு, தெலங்கானாவில் கடந்த முறை பா.ஜ.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம்” என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், “இந்தியாவின் அரசியல் மற்றும் தேர்தல் முறை உலகளவில் பாராட்டப்படுகிறது. ஒருவேளை நாடு பாராட்டப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லைபோ. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், EVM மோசடி குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கேலிக்குரியதாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை” என்றார்.