தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர்.
தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடியது. இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட அக்பருதீன் ஓவைசி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அதைத் தொடர்ந்து துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா உள்ளிட்டோர் பதவியேற்றனர். இதனையடுத்து அவை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், ராஜ்பவனில் தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஓவைசிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சபையில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக இடைக்கால சபாநாயகராக ஒவைசி நியமிக்கப்பட்டதாக மத்திய அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி குற்றம்சாட்டினார்.
சட்டப் பேரவை விதிகளை மீறியதால், தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமனத்தை எதிர்ப்பதாகவும், எனவே, அவர் மூலம் பதவியேற்பதை பாஜக உறுப்பினர்கள் புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார். ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் காங்கிரஸ் தனது அரசியலையும், சட்டமன்ற மரபுகளை மீறுவதையும் தொடங்கியுள்ளதாகவும் ரெட்டி குற்றம் சாட்டினார்.