ரேஷன் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறி, கடந்த 5-ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே கரையைக் கடந்தது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் கடந்த 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், ஏராளமான ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்தது.
வெள்ளநீர் புகுந்த கடைகளில், வைக்கப்பட்டிருந்த ஏராளமான அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகள் தண்ணீரில் ஊறி வீணாகின. நேற்று கடையைத் திறந்தபோது, மூட்டைகள் எல்லாம் பூஞ்சாணம் பூத்துக் கிடந்தன. கடைகளுக்குள் சென்ற ஊழியர்கள், இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டனர். ரேஷன் கடை ஊழியர்கள் கடும் துர்நாற்றத்துக்கு நடுவே, கடைகளுக்குள் தேங்கிய நீரை வெளியேற்றினர்.
பாதிப்படைந்த மூட்டைகளையும், பாதிப்பில்லாத மூட்டைகளையும் தனித்தனியே எடுத்து வைத்தனர். பாதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடை ஊழியர்கள் சேதமடைந்த பொருட்களைப் புகைப்படம் எடுத்து, காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக உயரதிகாரிகளுக்கு அனுப்பினர்.
ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை தயாரித்தும் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதைக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். விரைவில் சேதமடைந்த கடைகளில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன.