இந்திய ராணுவ படை, விமான படை, கடற்படை ஆகிய மூன்றும் இணைந்தது தான் இந்திய பாதுகாப்பு துறை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியபாதுகாப்பு துறை வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய பாதுகாப்பு துறை குறிப்பிடத்தக்க சில சாதனைகளை படைத்துள்ளது. அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பிரலே ஏவுகணை :
பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவத்திற்கு ‘பிரலே’ ஏவுகணைகளின் படைப்பிரிவை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
பிரலே ஏவுகணை என்பது அரை-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணையாகும். இது நடுவானில் பாதையை மாற்றிச் சென்று தாக்கும்திறன் கொண்டது. இந்த பிரலே ஏவுகணை நாட்டின் வளர்ச்சிக்கு பெறும் பங்குவகிக்கிறது.
அக்னி பிரைம் ஏவுகணை :
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) ஜூன் 7 ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை 1,000 கி.மீ. முதல் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். மேலும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனும் உடையது. அதேபோல, `அக்னி ப்ரைம்’ ஏவுகணைகளை ரயில், சாலை உள்ளிட்ட எந்த இடத்திலிருந்தும் ஏவ முடியும்.
நாட்டின் எந்தப் பகுதிக்கும் உடனடியாக கொண்டுசெல்ல முடியும். அக்னி-3 ஏவுகணையின் எடையைவிட, `அக்னி ப்ரைம்’ ஏவுகணையின் எடை 50 சதவீதம் குறைவாகும். அதிநவீன ரேடார்கள் மூலம் இந்த ஏவுகணை செல்லும் பாதையைக் கண்காணிப்பதுடன், அதை வழிநடத்தவும் முடியும்.
70,000 தாக்குதல் துப்பாக்கிகள் :
இந்திய ராணுவத்திற்கு கூடுதலாக 70,000 தாக்குதல் துப்பாக்கிகள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துப்பாக்கிகள் INSAS ரைபிள், AK-47 ஆகியவை விட ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
ஐஎன்எஸ் இம்பால் :
சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது. இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இணைத்துள்ளது.
ஐஎன்எஸ் தர்முகிலி :
ஐஎன்எஸ் தர்முகிலி என்ற விரைவுத் தாக்குதல் கப்பலை இந்திய கடற்படையில் தனது கடற்படையில் இணைத்தது. இக்கப்பல் இன்றுவரை தனது சிறப்புமிக்க சேவையின் போது மூன்று பெயர்களுடன் இரு நாடுகளின் கொடியின் கீழ் சேவையாற்றிய தனிச்சிறப்பு பெற்றுள்ளது.
MTU இன்ஜின்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், 30 மிமீ துப்பாக்கி மற்றும் மேம்பட்ட ரேடார் அமைப்பு ஆகியவை இந்தப் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
ரஃபேல் மரைன் ஜெட் :
பிரான்சிடம் இருந்து ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சியில், 26 ரஃபேல் மரைன் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸுடன் 6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் இந்தியா தொடங்கியுள்ளது.
DRDO :
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளை தாக்குதல் நடத்தும் விமானத்தை வடிவமைத்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, தானாக இறகுகளை கட்டுப்படுத்தி பறக்கும் ஆளில்லா சிறு விமானத்தை பரிசோதித்தது DRDO. ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் ஏந்தி தாக்கும் சோதனை முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்தியா.
சி-295 போக்குவரத்து விமானம் :
ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக சி-295 ரக விமானங்களைத் தயாரித்து ஒப்படைத்தது.
இந்த சி-295எம்டபிள்யூ ரக விமானமானது 5 முதல் 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. பாராசூட் குழுவினரை குறிப்பிட்ட இடத்தில் தரை இறக்குவதற்கும், சரக்குகளை தரை இறக்குவதற்கும் இந்த வகையிலான விமானங்கள் பயன்படும்.