கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திரா – கர்நாடக எல்லைப் பகுதிகளில் கடந்த 2005-ம் ஆண்டில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆகவே, நக்சல்களை ஒடுக்க கர்நாடக அரசு ‘நக்சல்கள் தடுப்புப் படை’ என்கிற பெயரில் தனிப் படையை அமைத்திருந்தது.
இந்த தனிப்படையினர், நக்சல்களை பிடிப்பதற்காக துமகூரு மாவட்டம், பாவகடா, வெங்கடம்மனஹள்ளியிலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 2005 பிப்ரவரி மாதம் முகாமிட்டிருந்தனர்.
அப்போது, பிப்ரவரி 11-ம் தேதி நள்ளிரவு லாரியில் வந்திறங்கிய நக்சல் கும்பல், தனிப்படை போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த போலீஸாரால், எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை.
இத்தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸாரும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர். பின்னர், போலீஸாரின் முகாமுக்குள் நுழைந்த நக்சல் கும்பல், போலீஸார் வைத்திருந்த அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பாவகடா போலீஸார் விசாரணை நடத்தி, 42 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றத்தில் இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் ஜாமீன் இல்லாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பலரும் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களை பாவகடா போலீஸார் கண்டுபிடித்து கைது செய்து வருன்றனர்.
இந்த நிலையில், ஆந்திராவில் இருந்த நாகராஜ், பத்மா, போய ஓபலேஷ், ராமமோகன், ஆஞ்சனேயலு ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து பாவகடாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.