கர்நாடகாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்த புகாரில், அச்சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கல்குவாரி உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நஞ்சே கவுடா. இவர், ‘கோமுல்’ எனும் கோலார் – சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
இந்த சூழலில், மேற்படி சங்கத்தில் காலியாக இருந்த 179 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு அறிவிப்பு வெளியானது. இதன் பிறகு, கடந்த டிசம்பர் மாதம் 179 பணியிடங்களும் நிரப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பட்டியல் வெளியானது.
இதையடுத்து, தேர்வு நடத்தாமலேயே பணம் வாங்கிக் கொண்டு 179 பேரையும் பணி நியமனம் செய்ததாக சங்கத் தலைவர் நஞ்சே கவுடா, இயக்குனர் அஸ்வத்நாராயணா பாபு, நிர்வாக இயக்குனர் கோபால்மூர்த்தி, நிர்வாக மேலாளர் நாகேஷ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, முறைகேடு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மாலூர் அருகே கொம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள நஞ்சே கவுடாவின் வீடு, அவரது எம்.எல்.ஏ. அலுவலகம், அவருக்குச் சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், நஞ்சேகவுடாவின் ஆதரவாளர் ஹரிஷ், சங்க இயக்குனர் அஸ்வத்நாராயணா பாபு, நிர்வாக இயக்குனர் கோபால்மூர்த்தி, நிர்வாக மேலாளர் நாகேஷ் ஆகியோரின் வீடுகள், கோலார் – சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் உட்பட 10 இடங்களிலும் இச்சோதனை நடைபெற்றது.
இச்சோதனையின்போது, நஞ்சே கவுடாவின் ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இச்சோதனையில் சிக்கிய சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.